அம்பலத்தில் அரங்கேற்றம் ஏன்?
ADDED :2114 days ago
படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவபெருமானால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர் பெறுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றுள்ளார். இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓடுகளை மாலையாக (கபால மாலை) சிவன் கழுத்தில் அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடிய நிலவில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் அது உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப ஆடவும் செய்ய எங்கும் மகிழ்ச்சி பரவும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சொல்வர். இதனடிப்படையில் இசை, நடனம் படிப்பவர்கள் பொன்னம்பலம் என்னும் சிதம்பரம் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.