பழநி கோயில் வாயிலில் திருமணங்கள்
ADDED :2173 days ago
பழநி: முகூர்த்த நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பாதவிநாயகர் கோயில், கிழக்கு கிரிவீதி சின்னவிநாயகர் கோயில், திருஆவினன்குடி கோயில் வாயில் முன்பு நின்றபடி மணமக்கள் தாலிகட்டினர்.
கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதுடன், திருமணம் போன்ற விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. கிராம கோயில்களில் கட்டுப் பாடுடன் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பெரிய கோயில்களுக்கு அனுமதி இல்லாததால், தினமும் பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று வழிபடுகின்றனர். இந்நிலையில் ஆவணி முகூர்த்த வளர்பிறை நாளான நேற்று பழநியில் ஏராளமான திருமணங்கள் நடந்தன. வீடுகள், விடுதிகளில் திருமணம் முடித்த தம்பதிகளும் கோயில் வாயிலுக்கு வந்து வழிபட்டனர். காதுகுத்து, நேர்த்திக் கடன் என வந்த சிலர் கோயில் வாசலிலேயே மொட்டை அடித்து காது குத்தினர்.