அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1832 days ago
ஈரோடு: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு திருமஞ்சனம், கோ பூஜை, யாகசாலை பூஜை, சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனைக்கு பின், 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவி வருவதால், அச்சத்துடன் நிதானமாக இடைவெளி விட்டு, வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர். முன்னதாக அனைவரும், சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து பிறகே அனுமதிக்கப்பட்டனர். முதலில் கமலவல்லி தாயார், அடுத்து உற்சவர், இறுதியில் மூலவர் கஸ்தூரி அரங்கநாதரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. இரவு, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழா மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, திருமண கோலத்தில் அருள்பாலித்தார்.