பொது நலத்துடன் வாழ்பவர்களால் தான் இன்றும் மழை பெய்கிறது: திருச்சி கல்யாணராமன் பேச்சு
மதுரை : மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் அனுஷ உற்ஸவத்தையொட்டி திருச்சி கல்யாணராமனின் சொற்பொழிவு வடக்கு மாசி வீதி தருமபுர ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. நள சரித்திரம் என்ற தலைப்பில் அவர் நேற்று பேசியதாவது: நள மகாராஜாவை படிக்க சனிபகவான் 12 ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குற்றமும் அவர் செய்யவில்லை. ஆனால் ஒரு நாள் காலை சரியாக கழுவவில்லை என கருதி நளவை சனி பிடித்தார். நாராயணன் நாமாவை சொல்லாதவர்களுக்கு எப்படி துன்பம் வருமோ அப்படி நளனுக்கு வந்தது.
புஷ்கரனோடு சூதாடி தோற்று, பின் அயோத்தி ராஜாவுக்கு தேரோட்டியும், சமையலும் செய்தார். பிறகு கார்க்கோடகன் அருளால் மனைவியுடன் ஒன்று சேர்ந்தார். சனி பகவான் காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்றார். நளன் தனக்காக கேட்காமல் பொது நலமாக,சனி பகவானே, நீங்கள் யாரை ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி என பிடித்திருக்கிறீர்களோ அப்போது அடியேனுடைய வரலாறை கேட்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என வரம் தாருங்கள், என்றார். நாம் சுயநலத்துடன் எந்த காரியத்தையும் செய்ய கூடாது. பொதுநலத்துடன் வாழ்பவர்களால் தான் இன்றும் மழை பெய்து கொண்டிருக்கிறது, என்றார்.இன்றும் (நவ., 17) சொற்பொழிவு நடக்கிறது.