உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக பகல்பத்து உற்சவம் துவங்கியது.
நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவம் துவங்கியது. காலை 10:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், பகல் 2:00 மணிக்கு ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருவாய்மொழியும், மாலை 4:00 மணிக்கு தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஆலய பிரதட்சிணமாக வலம் வந்து, பெருமாள் சன்னதியை அடைந்தார். பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக 24ம் தேதி இரவு பெருமாள் மோகன அவதாரத்தில் சாத்துப்படியும், திருமங்கை ஆழ்வார் மோட்ச வைபவம் நடக்கிறது. மறுநாள் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீசீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.