மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்தாண்டு போல் இந்தாண்டும், சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள், பக்தர்களின்றி நடத்தப்பட உள்ளன. திருவிழாவின் துவக்கமாக, நேற்று காலை, 10:50 மணிக்கு, சுவாமி சன்னிதி கம்பத்தடி மண்டபம் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி செல்லத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிழாவிற்காக, காப்பு காட்டிய கணேஷ் பட்டர் கொடியேற்றினார். தீபாராதனைக்கு பின், அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். மாலையில் ஆடி வீதியில் வலம் வந்தனர். ஆடி வீதியில் சுவாமி புறப்பாடு சமயத்தில், பக்தர்களுக்கு அனுமதியில்லை.
முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்., 22ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்., 23ல் திக் விஜயம் நடக்கிறது. திருக்கல்யாணம் ஏப்., 24 காலை, 8:45 முதல், 8:50 மணிக்குள் நடக்கிறது. இதை கோவில் இணையதளம் www.madurai meenakshi.org மூலம் பக்தர்கள் காணலாம்.