கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து
ADDED :1713 days ago
ஸ்ரீநகர் : கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை, பனியில் சிவலிங்கம் உருவாகும். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டிற்கான யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் மனோஜ்சின்ஹா நேற்று வெளியிட்டார். மேலும், பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தரிசிக்க, அமர்நாத் பனி லிங்கத்திற்கு காலை மற்றும் மாலை வேளையில் நடத்தப்படும் சிறப்பு பூஜைகளை, டிவியில் ஒளிபரப்பவும் அதிகாரி களுக்கு, அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.