பஞ்சலிங்கம் அருவியில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கோரிக்கை!
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லிங்கம் மற்றும் முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. திருமூர்த்தி மலைக்கு மேலுள்ள பஞ்சலிங்க அருவியும் உள்ளது. அருவிக்கு வெண்டையாறு, வண்டியாறு, கொட்டையாறு, பாறைப்பட்டியாறு, குருமலையாறு, உளுவியாறு, கிழவிப்பட்டி ஓடை பகுதிகளிலிருந்து நீர் வரத்துள்ளது. மலைப்பகுதியிலிருந்து விழும் அருவியின் மேற்குபகுதியிலுள்ள பாறைகளுக்கு நடுவே ஒரு அடி அகலத்தில், சுயம்புவாக ஐந்து லிங்கங்களும் உள்ளன. இவற்றின் மேல் பட்டு விழும் புனிதமான நீர் என்பதாலும் பலரும் புனித தலத்தில் குளிப்பதுடன், வழிபாடு நடத்தவும் ஆர்வம் காட்டினர். பக்தர்களின் வசதிக்காக சுயம்புவாக உள்ள பஞ்சலிங்கம் அமைந்துள்ள இடத்தின் அருகே 1975ம் ஆண்டு விநாயகர், முருகன் சிலை மற்றும் ஐந்து லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழக்கம் போல் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், 1986ம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பின், மீண்டும் 2002ம் ஆண்டு மீண்டும் ஐந்து லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை நடந்தது.
2009ம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், மூன்று லிங்கம் மற்றும் முருகன் சிலைகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், கடந்தாண்டு பிப்., மாதம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பெய்த கன மழையின் காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் மீண்டும் இரண்டு லிங்கம் மற்றும் முருகன் சிலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பஞ்சலிங்க அருவியிலுள்ள மூன்று லிங்கம் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு மட்டும் பூஜைகள் நடைபெறுகிறது.எனவே, பஞ்சலிங்க அருவியில், மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும், காட்டாற்று வெள்ளத்தில் சிலைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; பஞ்சலிங்க தரிசனத்திற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்,பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலைகளுக்கு மாற்றாக புதிய சிலைகள் அமைக்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும், என்றனர்.