மகா கணபதி கோவிலில் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அருகே மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீர்த்த குடங்கள் எடுத்துவந்தனர்.மேட்டுப்பாளையம் அருகே சிவன்புரம் ஆசிரியர் காலனி, ரங்கராஜ் லே-அவுட்டில், ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இங்கு புதிதாக கொடிமரம், பிரகல் நாயகி சமேத பிரகதீஸ்வரர் உற்சவர், பூமி நாயகி சமேத வரதராஜர் உற்சவர் ஆகிய சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதிதாக கட்டிய சன்னதிகளுக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.பின்பு காலை, 8:30லிருந்து, 9:30 மணிக்குள், அனைத்து தெய்வங்களுக்கும், கொடிமரம் மற்றும் கோபுரங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் அர்ச்சகர் லட்சுமி நாராயணன் தலைமையில், கணேஷ், செங்கோட்டுவேல், கண்ணன் ஆகிய சிவாச்சாரியார்கள், யாகசாலை பூஜைகளை செய்து, கும்பாபிஷேகம் நடத்தினர்.விழாவில் குழு தலைவர் சிதம்பரம், கவுரவத் தலைவர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவில் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.