தாமரையின் வெற்றி ரகசியம்
ADDED :1556 days ago
முருகனின் வலதுபுறம் வள்ளி, இடதுபுறம் தெய்வானை என இருவரும் இருக்கின்றனர். இவர்களில் வள்ளியின் கரத்தில் தாமரை மலரும், தெய்வானையின் கையில் நீலோற்பலம் மலரும் இருக்கும். முருகனுக்கும் தந்தையைப் போல மூன்று கண்கள் உண்டு. இவை சந்திரன், அக்னி மற்றும் சூரியன். இந்தக் கண்கள் எப்போதும் மூடுவதில்லை. இமைக்காமல் பக்தர்களைக் காப்பவர் முருகன். அவரது சூரியக்கண், வள்ளியின் கையிலுள்ள தாமரையைப் பார்ப்பதால், அது எப்போதுமே மலர்ந்திருக்கிறது. சந்திரக்கண் தெய்வானையின் கையிலுள்ள நீலோற்பலம் மலரைப் பார்ப்பதால் அதுவும் மலர்ந்திருக்கிறது. இவ்வாறு மலர்ந்த பூக்களைப் போல, முருகனை வணங்குவோரின் வாழ்வு மலர்ந்திருக்கும். அவர்களது செயல்பாடுகள் எதுவாயினும் வெற்றி பெறும். இதுவே வள்ளி, தெய்வானை தாமரை, நீலோற்பலம் மலர்கள் ஏந்தியுள்ளதின் வெற்றித் தத்துவம்.