உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம் எப்போது ?

அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம் எப்போது ?

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதியளித்தும், ஆயத்தப்பணியில் தொய்வு தென்படுவதால், பக்தர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது. கடந்த 1980ல், சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 1991, 2008 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு, 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி என்ற நிலையில், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்து வருவதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு இக்கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனக் கூறி சென்றார். அதன் தொடர்ச்சியாக, துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து கோவிலை பார்வையிட்டு, திருமுழுக்கு செய்வதற்குரிய முன்னேற்பாடுகளை ஆராய்ந்தனர். இருப்பினும், குடமுழுக்கு செய்வதற்கான பணிகள் வேகமெடுக்கவில்லை என,பக்தர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியிடம் கேட்ட போது, "குடமுழுக்கு செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணி துவங்கும்." என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !