உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளிக்குடி அருகே நாயக்கர்கால வரிவிதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளிக்குடி அருகே நாயக்கர்கால வரிவிதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கள்ளிக்குடி: கள்ளிக்குடி தாலுகா மருதங்குடி அருகே வரிவிதிப்பு தொடர்பான நாயக்கர்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறையின் ஆசிரியர் மாணவர் குறுந்திட்ட ஆய்வாக மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட சத்திரங்கள் பற்றி பேராசிரியர் சிந்து மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கள்ளிக்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வு செய்தபோது, சோமி குளம் கண்மாயில் கல்வெட்டு இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த சந்தோசமணி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த கல்வெட்டில் உள்ள தகவல்கள் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் உதவியோடு படிக்கப்பட்டது.

பேராசிரியர் சிந்து : மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நாயக்கர் கால சத்திரங்களை வரலாற்று மாணவர்கள் ஐஸ்வர்யா, விக்னேஸ்வரன், சிவமாலினி, தேவி, பிரியதர்ஷன் ஆகியோரோடு ஆய்வு செய்து வருகிறோம். பாண்டியர் காலத்தில் இந்தப் பகுதி வீர நாராயண வளநாடு பகுதிக்குட்பட்டதாக இருந்தது. இங்கு கண்டுபிடிக்கபட்ட நாயக்கர்கால கல்வெட்டு 4 அடி உயரமும் ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளை கொண்டதாகவும் உள்ளது. இதில் மருதங்குடி ஊரின் பெயரும், சோமி குளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு மழை அதிகம் பெய்து விவசாயம் அதிக அளவில் நடக்கும் போது நன்செய் வரியும், மழை குறைந்து விவசாயம் குறைவாக நடக்கும் போது புன்செய் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் ஒரே நிலத்திற்கு இருவகை வரிகள் வசூலிக்கப்படுவது குறித்து தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை வசூலிக்க காசடைய குடும்பத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு அந்த வரியை வசூலித்து நாயக்க மன்னர்களுக்கு செலுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !