தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இளையான்குடி அருகே உள்ள தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி, கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா நேற்று (29ம் தேதி) இரவு 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும், மறுநாள் 6ஆம் தேதி மின் விளக்கு அலங்கார தேரோட்டமும் நடைபெற உள்ளது. தற்போது மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.