திருத்தணி முருகன் கோவில் கிருத்திகை விழா
திருத்தணி, :திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில் நேற்று சித்திரை மாத கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிருத்திகை விழாவையொட்டி, வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் பொதுவழியில் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். சிறப்பு டிக்கெட் பெற்றவர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.