உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரவாரத்துடன் தேரில் வலம் வந்த மீஞ்சூர் வரதர்

ஆரவாரத்துடன் தேரில் வலம் வந்த மீஞ்சூர் வரதர்

மீஞ்சூர் : மீஞ்சூர் வரதராஜ பெருமாள், பக்தர்களின் ஆரவாரவத்தடன் தேரில் வலம் வந்து நேற்று அருள்பாலித்தார்.

மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது.அதைத் தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், நாக வாகனம் என, தினமும் உற்சவங்கள் சிறப்பாக நடந்தன.பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, ரத உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி உடன் உற்சவ பெருமான், 43 அடி மரத்தேரில் வீற்றிருந்தார். வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேர், காலை 8:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்டது.

பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என, கோஷம் எழுப்பினர். பக்தி பரவசத்துடனும், ஆரவாரத்துடனும் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.மாடவீதிகள் வழியாக வீதியுலா வந்து வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 11:00 மணிக்கு வீதியுலா முடிந்து, தேர் நிலைக்கு திரும்பியது. பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு வகைகளை வழங்கினர்.மாட வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம், மின் வாரியம், காவல், தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !