அனல் பறக்கும் ஆவேசம்
ADDED :1253 days ago
மைசூருவில் இருந்து ஹாசன் வழியாக 150 கி.மீ., துாரத்தில் உள்ளது பேலுார் சென்னகேசவர் கோயில். இங்கு பிரகாரத்தைச் சுற்றி ராமாயண, மகாபாரத, தசாவதார சிற்பங்கள் உள்ளன. இதில் உள்ள இரண்யனை வதம் செய்யும் நரசிம்மர் சிற்பம் சிறப்பானதாகும்.
கர்ஜிக்கும் நரசிம்மரின் கண்களில் அனல் பறக்க, முகத்தில் ஆவேசம் கொப்பளிக்கிறது. முன்னிரு கைகள் அசுரனின் வயிற்றை கிழித்து குடலை கழுத்தில் மாலையிட்டபடி உள்ளன. பின்னிரு கைகள் சங்கு, சக்கரத்தை தாங்கியுள்ளன. இரண்யனின் கைகள், தொடைகளை கைகளால் அழுத்தியபடி கோபத்தை வெளிப்படுத்துகிறார். நரசிம்மரின் பாதத்தின் அருகில் அசுரர்களும் கருடாழ்வாரும் கைகூப்பிய நிலையில் உள்ளனர்.