ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்று திருவிழா : 2 ஆண்டுகளுக்கு பின்பு கோலாகலம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகேயுள்ள உச்சி கருப்பன சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கனி மாற்று திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது.
அங்குள்ள கருப்பண சுவாமி கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. நான்கரை அடி உயரத்தில் கற்தூண்களும் இருபுறமும் அரிவாள் களும் உள்ளன. அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஏராளமான பித்தளை மணிகள் உள்ளன. இவற்றை பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு சுவாமி கும்பிட வருபவர்கள் கோயில் வளாகத்திலேயே தேங்காய், பழங்களை சுவாமிக்கு படைத்து அங்கேயே சாப்பிட்டு வீட்டுக்குச் செல்வர். நெற்றியில் இட்டுக்கொள்ளும் விபூதி, சந்தனம் குங்குமத்தை கோயில் எல்லை தாண்டும் முன் அழித்து விடுவர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கனி மாற்று திருவிழா கொரோனா தடை உத்தரவால் இரண்டு ஆண்டுகள் நடக்கவில்லை. இன்று காலை திருப்பரங்குன்றத்தில் உள்ள கோயில் வீட்டிலிருந்து 3000 வாழைப்பழங்கள், 500 மாம்பழங்கள், 500 பலாச்சுளைகள், மாலைகள், சந்தனம், பூஜை பொருட்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று உச்சி கருப்பண சுவாமி கோயிலில் படைத்தனர். தீபாராதனை முடிந்து கனிகள் மாற்றப்பட்டன.