மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தரிசனம்
திருப்புவனம்,: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவசுப்ரமணியன் ஆகியோர் வந்திருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் அம்மன் படங்கள் வழங்கப்பட்டன.
பின் செய்தியாளர்களிடம் சிவன் பேசுகையில்: விண்வெளி பொருளாதாரத்தில் முதன்மை பெற்றிட தனியார் பங்களிப்பு அவசியம், இதற்காக பிரதமர் மோடி புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளார், அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும். விண்வெளி தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி திரும்ப அழைத்து வரும் சுகன்யான் திட்டத்தில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும், அதிலும் தமிழக மாணவர்கள் அதில் ஈடுபட வேண்டும், இதற்காக இன்று மதுரையில் ஐந்து வெவ்வேறு கல்லூரிகளில் 10 ஆயிரம் மாணவர்களுடன் கலந்துரையாட வந்துள்ளேன். அகண்ட பாரத நாடு மீண்டும் மகிமை பெற மடப்புரம் காளியம்மனை வேண்ட வந்துள்ளேன், என்றார். அவருடன் ஓய்வு பெற்ற விஞ்ஞானி சிவசுப்ரமணியனும் வந்திருந்தார்.