திருநங்கைகள் கொண்டாடிய சமயபுரம் மாரியம்மன் திருவிழா
குமாரபாளையம் : குமாரபாளையத்தில் திருநங்கைகள் சார்பில், சமயபுரம் மாரியம்மன் திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. 14ம் ஆண்டிற்கான விழா, கூழ் படைத்தல் மற்றும் அன்னதான விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், நவதான்ய பச்சை கம்பம் நடுதல், அம்மனுக்கு பூச்சாட்டி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், மேளதாளங்களுடன் நடந்தது. இதில் நவசக்தி வேடம், மாகாளி வேடமணிந்தவாறும், கரகாட்டத்துடனும், வாண வேடிக்கையுடனும் திருநங்கைகள் ஊர்வலம் வந்தனர். மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்த ரதத்தில், சமயபுரம் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். நேற்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, கூழ் வார்த்தல், அம்மன் திருவீதி உலா, தெருக்கூத்து நடந்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாதம்மாள் மற்றும் திருநங்கைகள் குழுவினர் செய்திருந்தனர்.