சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : சரண கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
சபரிமலை: சபரிமலையில் இன்று காலை நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவதில்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகத்துக்கு பின்னர் நிறைபுத்திரிசி பூஜைக்கான சடங்குகள் தொடங்கியது. கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜை செய்த நெற்கதிர்களை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தலையில் சுமந்து கோயிலை வலம் வந்தார். இந்த நெற்கதிர்கள் தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்டது. ஸ்ரீகோயிலுக்குள் 5:45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு நெற்கதிரகளுக்கு பூஜை நடத்தி கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. சபரிமலையில் பலத்த மழை பெய்த நிலையிலும் சரண கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் நடத்தினர்.
கன்னியாகுமரி: கேரள ஆகம விதிகளை பின்பற்றும் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட குமரி மாவட்ட முக்கிய கோயில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது.