100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கஞ்சி கலயம் சுமந்து வினோத வழிபாடு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி,பொசுக்குடி பட்டி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கிராமமக்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் வைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
முதுகுளத்தூர் அருகே பொசுக்குடி,பொசுக்குடி பட்டி கிராமமக்கள் நன்கு மழை பெய்து விவசாயம் செழிக்க வலியுறுத்தி காளியம்மன் கோயிலுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாரம்பரிய முறையில் உணவுகளான நெல் சோறு, கேப்பை கூழ்,மாவு வகைகள், வெங்காயம் ஒன்றாக சமைத்து கஞ்சி தயார் செய்தனர். பின்பு கிராமத்தில் உள்ள ஆண்கள் ,பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலுக்கு சென்றனர். காளியம்மன் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்புபூஜைகள்,தீபாரதனை நடந்தது. அதற்கு பின்பு தயார் செய்யப்பட்டுள்ள கஞ்சிகளை பாரம்பரிய முறையில் பனைஓலை மட்டையில் கிராமமக்களுக்கு பரிமாறி கொடுத்தனர். கிராமத்தில் பழமை மாறாமல் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே பனை ஓலையில் உணவு வழங்கி வினோத வழிபாடு நடத்துவது தொடர்கிறது என்று கிராமமக்கள் கூறினர்.