நவபாஷாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
தேவிபட்டினம்: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜை செய்யவும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி,தை அமாவாசை தினங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து புனித நீராடி செல்கின்றனர். இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண கடல் பகுதி, வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நவபாஷாண பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நவபாஷாண பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வருகை தந்து நவபாஷாண நவக்கிரகத்தை நடைமேடை வழியாக சுற்றிவத்து வழிபட்டு சென்றனர்.