சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேர் திருவிழா நாளை ஆருத்ரா தரிசன விழா
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்றும், தரிசன விழா நாளையும் நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம், ஆனியில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்தி வீதியுலா நடந்து வந்தது. ஜனவரி 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 2-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதியுலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், .4-ம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடந்தது. அதனையடுத்து முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து தேர் இழுக்க உள்ளனர். தேரோட்டத்தையொட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து, நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா சென்று வந்த பின் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. 7- ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவோடு உற்சவம் முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.