உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம்

உத்தரகோசமங்கையில் மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு சிறப்பு அபிஷேகம்

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பச்சை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதற்காக இன்று காலை நடராஜர் திருமேனியில் பழைய சந்தனம் படிகளையப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சந்தனாதி தைலம் பூசப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இவர்கள் பலமணி நேரம்வரை வரிசையில் காத்து நின்று நடராஜரை தரிசித்தனர். நாளை அதிகாலை நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு சர்வ அலங்காரமும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !