அய்யா வைகுண்டர் 191வது அவதார தின விழா : பக்தர்கள் பேரணி
நாகர்கோவில், அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினவிழாவையொட்டி நாகர்கோவிலி்ருந்து சுவாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்களின் பேரணி நடைபெற்றது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரின் தலைமை பதி சுவாமி தோப்பில் அமைந்துள்ளது.
அவரது அவதார தினம் எல்லா ஆண்டும் மாசி 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கால்நடையாகவும், வாகனங்களிலும் நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலில் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தனர். இங்கு அய்யாவழி சமய மாநாடு, அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பால ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. நேற்று காலை இங்கிருந்து பேரணி புறப்பட்டு சுவாமிதோப்பு சென்றது. பேரணியில் முன்னால் மேளதாளம், சிறுமியரின் கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அய்யாவின் அகிலதிரட்டு புத்தகத்தை பூபல்லக்கில் வைத்து பக்தர்கள் சுமந்து வந்தனர். சுவாமிதோப்பில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நீண்ட வரிசையில் நின்று அய்யாவை வழிபட்டனர். மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.