உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் 3ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் 3ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்

பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கியது. அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் புகழ்பெற்ற சோழ பேரரசின் இரண்டாவது தலைநகராக அமைந்ததாகும். முதலாம் ராஜராஜ சோழனின் மகனும் அவரை தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் ராஜேந்திரனால் இந்நகரமானது சோழ நாட்டின் தலைநகராக தோற்றுவிக்கப்பட்டது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்ற தனது பயணத்தை நிறைவு கூறும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாக அமைத்ததாக வரலாறு கூறுகிறது. ஏன் முதலாம் ராஜேந்திரனின் ஆட்சியின் போது திருமாளிகை கங்கைகொண்ட சோழன் மாளிகை, சோழ கேரளம், திருமாளிகை என்ற பெயரில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேடு பகுதியில் கடந்த 2020-2022 ம் ஆண்டுகளில் அகழாய் பணிகளை மேற்கொண்டது. இதில், செங்கல் கட்டுமானங்கள் பல்வேறு வகையான பானை ஓடுகள் மற்றும் தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பிலான பொருட்கள், செப்பு காசுகள், தங்க காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் அதிக அளவில் வளையல் துண்டுகள் தங்கத்தினால் ஆன பொருட்கள் வட்ட சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கிண்டி மூக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 11 மற்றும் 12ம் நுாற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிக தொடர்பை வெளிப்படுத்துவதாக தொல்லியல் அலுவலர்கள் கூறுகின்றனர். கங்கைகொண்ட சோழபுரம் மாரியம்மன் முதற்கட்ட பணிகள் முதற்கட்ட பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக ஐந்து அகழாய்வு குழிகளைக் கொண்ட 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் மொத்தமாக 1,003 தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் 2022 பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடந்தது. இதில் 19 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்ற ஆய்வில் மொத்தமாக 1010 பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனிடையே மாளிகை மேடு பகுதியில் ஆர்.டி.ஓ., பரிமளம் மூன்றாம் கட்ட அகழாய் பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு பத்துக்கு பத்து என்ற அளவீடுகளில் குழிகள் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இந்த பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் அலுவலர் சுபலட்சுமி, அலுவலக பணியாளர் மகராஜன், அசோகன், மருதகாசி உட்படபலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !