உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரிருளை நீக்க வந்த ஜோதி; வள்ளலார் 200வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை

காரிருளை நீக்க வந்த ஜோதி; வள்ளலார் 200வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை

கடலுார் : அறியாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை பற்றி சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.

கடலுார் மாவட்டம், வடலுாரில் நடந்த வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின், 200வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன்.  அப்போது வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்.  காழ்ப்புணர்ச்சி மற்றும் அறியாமை காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்து கருத்துக்களை கூறி வருகின்றனர். அடிப்படை உண்மை என்பது ஒரு பரமேஸ்வரன். அவன் படைத்த மனிதன், விலங்குகள், செடி கொடிகள் என அனைத்தும் ஒரு குடும்பமே.

இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்களின் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளது. உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள், சனாதன தர்மத்தின் எதிரொலியாகும். 200 ஆண்டுகளுக்கு முன், இருளை நீக்க வந்த ஜோதி தான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலின்போது, தோன்றியவர் அவர். நாட்டில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்த போதும். புதிதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது. இந்திய பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடு இருந்தது. ஆனால் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.

வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்.  ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு நமது நாடு. நாட்டின் பிரதமர் பேசுவதை உலகத் தலைவர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும்.  இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும் போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் கொள்கையை ஏற்போம். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !