சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
செஞ்சி; ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஆய்வு நடத்தினார்.
செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் மலை மீது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர்கள் கால ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடி மரத்தின் எதிரே இருந்த சுற்று சுவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அத்துடன் மலை கோவிலின் மேலே வாகனங்கள் செல்வதற்கு துவங்கிய சாலை அமைக்கும் பணியும் இரண்டு ஆண்டாக பாதியில் நின்றுள்ளது. சுற்று சுவர் இல்லாமல் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டாக வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்களை மலை மீது அனுமதிக்காமல் தடை செய்திருந்தனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், சிங்கவரம் ரங்கநாதர் கோவிலிலும் ஆய்வு நடத்தினார். சுற்றுவர் இடிந்த பகுதி, தடை பட்ட சாலைகளை பார்வையிட்டார். பின்னர் சாமி தரிசனம் செய்தார். இந்த ஆய்வின் போது இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சிவலிங்கம், துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சிவாகரன், உதவி ஆணையர் ஜீவானந்தம், தொல்லியல் ஆலோசகர் மணி, மேலாளர் மணி, அலுவலர் இளங்கீர்த்தி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.