மாசி முதல் தேதியில் சபரிமலையில் அலைமோதிய பக்தர் கூட்டம்
சபரிமலை; மாசி மாத முதல் தேதி அதிகாலையில் சபரிமலை ஐயப்பனை கும்பிடுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கேரளாவில் தமிழகத்தை விட ஒரு நாள் தாமதமாக மாசி மாதம் நேற்று தொடங்கியது. மாசி முதல் தேதி அதிகாலை ஐயப்பனை கும்பிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் கூடியிருந்தனர். அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த போது 18 படிக்கு கீழ் உள்ள திருமுற்றத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதிலும் சிரமம் இருந்தது. நடை திறந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை. புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெற்றது. வரும் 18 வரை எல்லா நாட்களிலும் இந்த பூஜை நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.