உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் களிமேட்டில் 96ம் ஆண்டு அப்பர் சதய விழா; திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் களிமேட்டில் 96ம் ஆண்டு அப்பர் சதய விழா; திருநாவுக்கரசருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் அமைத்து, அவருக்கு சித்திரை சதய நாளில் குரு பூஜையை கிராம மக்கள் ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது, ஏற்பட்ட எதிர்பாராத வகையில் மின்கம்பி தேர்மீது உரசியதில் மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த பிறகு, கடந்தாண்டு, களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதயவிழா ஒரு நாள் மட்டுமே நடந்தது.  இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பிலும் அப்பர் பேரவை சார்பிலும் 96 வது ஆண்டாக அப்பர் சதயவிழாவினை தொடங்கி, மூன்று நாட்களுக்கு கொண்டாட திட்டமிட்டனர். அதன்படி களிமேடு அப்பர் மடத்தில் இன்று மங்கள இசையுடன் விழா துவங்கியது.  தொடர்ந்து திருமுறை இசையும், அப்பர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும், மகேஸ்வர பூஜையும் நடந்தது. பிறகு மாலை கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  சுரேஷ்குமார் முன்னிலையில், சென்னை குன்றத்துார் பிரபாகரமூர்த்தியின் ஆன்மிக சொற்பொழி நடந்தது. புதியதாக தயாரிக்கப்பட்ட தேரில், அப்பர் பெருமானின் 300 ஆண்டு பழமையான ஓவியம் மற்றும் அப்பரின் உருவச் சிலை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  நாளை (4ம் தேதி) மாலை பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டி, அப்பர் பெருமான் வழிபாடும், பரதநாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் (5ம் தேதி) அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிகழ்வுகள் நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !