கருடன் வட்டமிட காசம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
நத்தம்; நத்தம் அருகே காசம்பட்டி கற்பக விநாயகர், முத்தாலம்மன் கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடந்த ஆக.19 முதல் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மூலமந்திர ஹோமம் மற்றும் முதல் காலயாக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து இன்று இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் கோவிலை சுற்றி நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த விழாவையொட்டி மூலவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை காசம்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.