பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் உறியடி விழா
பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, உறியடி உற்சவம் நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த மூன்று நாட்களாக நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் உறி அடிக்கும் கண்ணன் திருக்கோலத்தில் சேஷ வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் இரவு 8:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி பெருமாள் கோயில் முன்பு, காளிதாஸ் பள்ளிக்கூட தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் உறிகளில் கட்டப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் கிருஷ்ணர் வேடமிட்டவர் பால், தயிர், வெண்ணை உள்ளிட்டவற்றை பானைகளில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ரத வீதிகளின் சுற்றி வந்த பெருமாள் இரவு 11:00 மணிக்கு கோயில் அடைந்தார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர். எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் உறியடி உற்சவ விழாவில், பெருமாள் கருட வாகனத்தில் கிருஷ்ணனாக அலங்காரமாகினார். தொடர்ந்து பல்வேறு முக்கிய வீதிகளில் உறியடிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.