ஆவணி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
இன்று ஆவணி அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் சுத்திகரித்து நீரை குழாய் மூலம் 200 மீ., துாரத்தில் கடத்தி கடலில் நகராட்சி கலந்தது. ஆனால் நேற்று குழாய் உடைந்து கழிவுநீர் நேரடியாக கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி நீராடிச் சென்றனர்.