சதுரகிரியில் நவராத்திரி விழா அம்பு விடுதலுடன் நிறைவு
ADDED :363 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 3ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், கொலு எழுந்தருளலும் நடந்தது. நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு, அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் வில் அம்புடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின், பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மி வழிபாடு செய்தனர். மதியம் 12:00 மணிக்கு மேல் அம்மன் மகிஷாசுர அரக்கனை அழிப்பதற்காக சன்னதியை விட்டு வெளிவந்தார். பின்னர், கோவில் வளாகத்தின் வெளியே வாழை மர உருவில் மறைந்திருந்த அரக்கனை அம்பு விட்டு ஆனந்தவல்லி அம்மன் அழித்தார். கொட்டும் மழையில் நடந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் ஆரவாரத்துடன் தரிசித்தனர்.