உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1,300 ஆண்டுகள் பழமையான துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனஸ்கோ விருது

1,300 ஆண்டுகள் பழமையான துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனஸ்கோ விருது

தஞ்சாவூர்; கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில், சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானதாகும். சுமார் 7 ஏக்கரில் அமைந்துள்ள கோவிலானது ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தொடர்ந்து குலோத்துங்கன் சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோரால், கோவில் புணரமைத்தாக கல்வெட்டு உள்ளது. கோவிலில் பழமையான கலை நயமிக்க, அழகிய சிலைகளுடன் கூடியவை. இக்கோவிலில் எந்த ஆண்டு இறுதியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது என தெரியாமல் சிதைந்த நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து, கிராமமக்கள் முயற்சியாலும், ஹிந்து சமய அறநிலையத்துறையாலும் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு செப். 03ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான யுனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,  யுனஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக கோவிலுக்கு சிறப்பு விருதை அறிவித்தது. அதில், அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மறுமலர்ச்சி ஆகும். ஒரு காலத்தில் கைவிடப்பட்ட சமயத் தளத்திற்கு புதிய உயிர் கொடுத்துள்ளது. நவீன பாதுகாப்பு அறிவியலைப் பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் இந்து கோயில் கட்டுபவர்களின் அறிவாற்றல், ஸ்தபதி, உள்ளூர் கைவினைஞர் மரபுகளுக்கு ஏற்ப கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அலங்கார வேலைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயிலை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதில், இத்திட்டத்தின் கல்வியியல் நோக்கங்கள் பாராட்டுக்குரியது. அரசு மற்றும் பக்தர்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு இந்த வரலாற்று கோவிலின் தொடர்ச்சியை நவீன கால பக்தி சூழலில் செயல்படுத்தியுள்ளது என அதில் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் உமாதேவி கூறியதாவது:  ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக உலகப் புகழ் பெற்ற அமைப்பான யுனஸ்கோவால் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கோயிலின் சிறப்புகள் உலகம் அறியப்படும். மேலும், இங்கு சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !