திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் அத்யயன உற்சவம்
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவம் நேற்று துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 2ம் நாளான நேற்று காலை 11:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாளுக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தி உலாவை தொடர்ந்து, ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தனர். இரவு 7:30 மணிக்கு கண்ணாடி அறையில் எழுந்தருளி திவ்யபிரபந்தம், சேவை சாற்றுமறை, விசேஷ திருவாராதணம், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம் நடந்தது. இரவு 9:30 மணிக்கு தாயார், பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 3-ம் தேதி இரவு 8:00 மணிக்கு கண்ணாடி அறையில் புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீசபெருமாள் ஒரு சேர எழுந்தருளி எழுந்தருளி திவ்யபிரபந்தம், சேவை சாற்றுமறை, பெருமாள் தாயார் கண்ணாடி அறையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழா ஏற்பாடுகள் நடந்தது.