மகாசிவராத்திரி, பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காலையில் மலையேறும் போது வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில் மதியம் 1:00 மணிக்குமேல் லேசான சாரல் பெய்தது. கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வனத்துறையினர், போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.