பெரியபட்டினத்தில் பழமையான திருமால் சிலை கண்டெடுப்பு
பெரியபட்டினம்; பெரியபட்டினத்தில் குதிரை மலையான் கருப்பண்ண சுவாமி, சத்தீஸ்வரி கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பழமையான கோயில் உள்ளது. இதனருகே உள்ள அரச மரத்தில் பல ஆண்டுகளாக வெளியே தெரியாத நிலையில் 3 அடி நீல அகலம் கொண்ட வெள்ளை கடற்பாறையால் ஆன பாராங்கல் இருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சிவராத்திரி உற்ஸவ விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் தரையில் புதைந்திருந்த வெள்ளை கடப்பாறையை புரட்டி போட்டு மரத்தின் அடியில் வைத்தனர். அவற்றிற்கு நீர் ஊற்றி மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். பெரியபட்டினம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் கிணறு தோண்டும் பொழுது கிடைத்த கடல் பாறையாளான திருமால் சிலையாகும். நீண்ட கிரீடத்துடன் கூடிய காதுகள் வளர்க்கப்பட்ட மகர குண்டங்களுடன் உள்ளது. தற்போது மூன்று அடி உயரத்தில் திருமாலின் திருமேனி உள்ளது. இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பகுதி இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே தொல்லியல் துறையினர் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டால், வரலாற்று ஆய்வாளர்கள் மூலம் திருமால் சிலை குறித்த விபரங்கள் தெரியவரும் என்றனர். பெரியபட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கப்பெற்ற புத்தர், மகாவீரர் உள்ளிட்ட சிலைகள் அரசு அருங்காட்சியத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.