குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 36 சவரன் தங்க கிரீடம் காணிக்கை
ADDED :261 days ago
பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 36 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, தமிழகம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர், காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் நேற்று கொடிமரத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில், கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் நிர்வாகி வினயன், துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர்களான ராமகிருஷ்ணன், சுபாஷ், லெஜுமோள், கிரீடம் சமர்ப்பித்த குலோத்துங்கன் குடும்பத்தினர் பங்கேற்றனர். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.