ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் துவக்கம்
ADDED :164 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் நேற்று முதல் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு வெள்ளிகுறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தன காப்பு சாற்றப்பட்டும், புஷ்பஆடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மாடவீதிகள் வழியாக நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். மே 11 வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருள்கின்றனர்.