ராமேஸ்வரத்தில் தங்க பல்லக்கில் வீதி உலா வந்த பர்வதவர்த்தினி அம்மன்
ADDED :81 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாளையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில், புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து விட்டு புனித நீராடினர். இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடினர். இதன்பின் கோவிலில் சுவாமி, அம்மன் சன்னிதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசனம் செய்தனர். ஆடித் திருக்கல்யாணம், இரண்டாம் நாள் விழாவையொட்டி, காலையில் கோவிலில் இருந்து, பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்தார். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோவில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.