மகாளய அமாவாசை; நந்தவனத்தில் தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடு
மேட்டுப்பாளையம்; மகாளய அமாவாசை முன்னிட்டு, இறந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், 40 புரோகிதர்கள் புரோகிதம் செய்ய, நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் கோவிந்தம் பிள்ளை மயானம் அருகே, நகராட்சிக்கு உட்பட்ட, அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனம் உள்ளது. நந்தவனத்தின் கீழே பவானி ஆறு ஓடுகிறது. மேல் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவில் உள்ளது. அதனால் காசிக்கு இணையாக, இந்த நந்தவனம் அமைந்துள்ளது என கூறுகின்றனர். இங்கு இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதற்காக நந்தவனத்தில், 12 புரோகிதர்கள் நிரந்தரமாக உள்ளனர். 21ம் தேதி மகாளய அமாவாசை முன்னிட்டு, ஏராளமான பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய, நந்தவனம் நிர்வாகத்தினர் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து ஹிந்து சமுதாய நந்தவனத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் அருணாச்சலக்குமார் ஆகியோர் கூறியதாவது: மகாளய அமாவாசையை நாளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஒவ்வொரு ஆண்டும் நந்தவனத்திற்கு வருகின்றனர். இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசையை வருகிறது. விடுமுறை நாள் என்பதால் எதிர்பார்க்கும் மக்களை விட, அதிகமான மக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வருகிற பொதுமக்கள் வரிசையாக நின்று தர்ப்பணம் செய்ய, பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நந்தவனத்தில், 12 புரோகிதர்கள் மட்டுமே உள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக திருச்சி, கடலூர், கோவை, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்து கூடுதலாக, 28 புரோகிதர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். மொத்தமாக, 40 புரோகிதர்கள் புரோகிதம் செய்வர்.
நந்தவனம், 21ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும். வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் பாட்டில், டீ, பிஸ்கட் மற்றும் காலை முதல் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது. பொதுமக்களை வரிசையாக நிற்க வைக்கவும், ஒவ்வொருவராக புரோகிதம் செய்ய அனுப்புவதற்கும், 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுவர். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.