விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ஐப்பசி வெள்ளி மகா அபிஷேகம்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை, அம்பாளுக்கு மகாஅபிஷேகம் நடைபெற்றது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 153 வது தேவாரத்தலமாக விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில் விளங்குகிறது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. இக்கோவிலில், ஐப்பசி வெள்ளியை முன்னிட்டு, இன்று (24ம் தேதி) சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சௌந்தர்ய, சௌபாக்கியம் அருளும் மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.