விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முருகன் சிலையில் வியர்வை துளிகள்; விருதையில் பக்தர்கள் பரவசம்
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் மீது வியர்வை துளிகள் வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், கந்தர் சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் மற்றும் 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு தினசரி சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. சூரசம்ஹாரத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு விருத்தாம்பிகை அம்மனிடம் வேல் வாங்கி சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடந்தது. இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில், வள்ளி தெய்வானை சமேத குமரேஸ்வரர் சுவாமிகள் மீது வியர்வை துளிகள் போல நீர்த்துளிகள் உதிர்ந்து வழிந்தோடியது. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி, தீபமிட்டு வழிபட்டனர். தகவலறிந்த பக்தர்கள் பலரும் திரண்டு வந்து, குமரேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். பிரசித்தி பெற்ற பழமையான கோவிலில் கந்தர் சஷ்டி விழாவின்போது, சுவாமி சிலைகள் மீது வியர்வை துளிகள் வழிந்தோடிய சம்பவம், பக்தர்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியது.