உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா; பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா; பெருவுடையாருக்கு பேரபிஷேகம்

தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  யானை மீது திமுறை நூல்கள் வைத்து வீதியுலா நடைபெற்றது. பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட  மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.


உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய , மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (நவ.1ம் தேதி) காலை திருக்கோவிலில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மேயர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழா குழு தலைவர் செல்வம், அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட  மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !