காஞ்சி சிவன் கோவில்களில் வரும் 4, 5ல் அன்னாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிவன் கோவில்களில் வரும் 4, 5ல் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாதத்தில் வரும் அசுவனி நட்சத்திரம் அல்லது பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிவலிங்கத்தை அன்னம் மற்றும் காய்கறி, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை செய்வதையே அன்னாபிஷேகம் என, அழைக்கப்படுகிறது. அதன்படி, ஐப்பசி மாத அசுவனி நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், காமராஜர் வீதி சித்தீஸ்வரர், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு தென்கோடி ருத்ரகோட்டீஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் வரும் 4ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வரர் கிளார் அகத்தீஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி உள்ளிட்ட சிவன் கோவில்களில் வரும் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.