அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது அம்மன் சிலை கண்டெடுப்பு
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது பராசக்தி அம்மன் சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோவில் பாழடைந்து, பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. ஒரு கால பூஜை அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை வழிபாட்டை தொடங்கியது. பழமையான இக்கோவிலை புனரமைத்து திருப்பணி செய்ய வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் 2.63 கோடி மதிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கோவில் திருப்பணியை துவக்கியது. நேற்று மாலை ஜே.சி.பி., மூலம் கருங்கற்களை அகற்றும் பணி நடந்து. அப்பொழுது கற்களுக்கு மத்தியில் இரண்டரை அடி உயரமுடன், கைகளில் திரிசூலம், உடுக்கை, கபாலம், ஆயுதம் ஏந்தி விரிசடையுடன் கூடிய பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. கூடவே பூஜை செய்யும் மணியும் இருந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் சிலையை மீட்டு பாதுகாப்பாக ஒரு வீட்டில் வைத்து பூட்டி வைத்தனர். இச்சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.