காஞ்சி ஏகாம்பரநாதர் புதிய தங்கத்தேருக்கு டிசம்பர் 7ல் சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் தேதி வெள்ளோட்டமும், டிச., 7ம் தேதி சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது என, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் டிச.,8ம் தேதி நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு புதிய தங்கத் தேர், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையினரால் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தேரின் வெள்ளோட்டம் டிச.,6ம் தேதியும் டிச., 7ம் தேதி தங்கத்தேருக்கு என, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் தயார் செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை அறக்கட்டளை நிர்வாகிகள் மகாலட்சுமி சுப்பிரமணியன், பத்மனாபன், வலசை. ஜெயராமன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர். அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியன் கூறியதாவது: தங்கத்தேரில் நான்கு வேதங்கள், நான்கு குதிரைகளாகவும், 25 அடி உயரம், 10 அடி அகலம், 13 அடி நீளத்திலும், சாமரப்பெண்கள் நான்கு பேர் நின்ற கோலத்திலும், பிரம்மா தங்கத்தேரை ஓட்டுவது போலவும், தங்கத்தகடுகளால் வேயப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேரில் 16 நந்திகள், 8 கந்தர்வர்கள், 8 சங்குநாத பூதங்களும் இடம் பெற்றுள்ளன. பர்மா தேக்கில் ஐந்து அடுக்குகள் உடையதாகவும், 2 டன் தாமிரமும், அதன் மீது தங்கமுலாமும் பூசி தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்தேருக்கு டிச.,4ம் தேதி ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் யாகசாலை பூஜை துவங்குகிறது. டிச.,5ம் தேதி சிறப்பு பூஜைகளும், டிச., 6 தேதி மாலை 4:00 மணிக்கு, ஓரிக்கையில் இருந்து ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கத்தேர் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், வடம் பிடித்து இழுத்து தங்கத் தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கிறார். டிச.,7ம் தேதி காலை 7:00 மணிக்கு ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். டிச., 8ம் தேதி ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று கோவில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் முறைப்படி ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.