காசி புனித யாத்திரை; ராமேஸ்வரத்தில் இருந்து 602 பக்தர்கள் பயணம்
ராமேஸ்வரம்: காசி புனித யாத்திரையாக ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து 602 பக்தர்கள் சிறப்பு ரயிலில் சென்றனர்.
தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ராமேஸ்வரம்– காசி புனித யாத்திரை செல்ல பக்தர்களை தேர்வு செய்து அனுப்புகின்றனர். அதன்படி 4ம் ஆண்டாக தமிழகத்தில் பல பகுதியில் இருந்து தேர்வான 602 பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின் ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் செல்லதுரை தலைமையில் கோயில் ஊழியர்கள் பக்தர்களை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சிறப்பு ரயில் மூலம் காசிக்கு வழியனுப்பினர். பக்தர்கள் காசியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அதே சிறப்பு ரயிலில் டிச., 11ல் ராமேஸ்வரம் வர உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் 920 பக்தர்கள் உள்ளிட்ட 1522 பேர் காசி யாத்திரை சென்றுள்ளனர்.