பழநி வடக்கு கிரிவிதி வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்க்கை கோயில் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பழநி வடக்கு கிரி வீதியில்,முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்க்கை கோயில் உள்ளது. இங்கு கடந்த 1999ல் அக்., 29 அன்று கும்பாபிஷேகம் பெற்றது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற நவ.10 ல பாலாலயம், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ 82.65 லட்சத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் (டிச.6.,) காலை 7:00 மணிக்கு இறை அனுமதி பெறுதல் கணபதி பூஜை நடைபெற்றது.மாலை புனித மண் எடுத்தல், முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது. நேற்று (டிச.,7) இரண்டாம் கால வேள்வி பூஜை, காலை 7:00 மணிக்கு துவங்கியது. இதில் திருமேனியை தூய்மை செய்தல், பல்பொருள் வேள்வி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. திருக்குடங்கள் வேள்விச்சாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு, வடக்கு கிரி வீதியில் உள்ள வீரத் துர்க்கை அம்மன் கோயில், கருவறை விமான கலச கும்பாபிஷேகம் காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து விநாயகர், மூலவர், வீரதுர்க்கை அம்மன், வள்ளி, தெய்வயானை, சுப்ரமணியர்களுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.